CRIME
“6 ஆண்டுகால மர்மம் உடைந்தது..! கர்ப்பிணி காதலி தற்கொலை வழக்கில் சிக்கிய காதலன்… நடந்தது என்ன..?!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரைக் காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பால் ஈஸ்வரிக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட போதிலும், ஒரே நாளில் அவர் கணவரைப் பிரிந்து மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்னரும் ராஜ்குமாருடன் காதலைத் தொடர்ந்த நிலையில், அவர் ஈஸ்வரியைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளார். ஆனால், இறுதியில் ஈஸ்வரியை ஏமாற்றிவிட்டு ராஜ்குமார் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த ஈஸ்வரி கடந்த 2019ஆம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீசார் சந்தேக மரண வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனையில் ஈஸ்வரி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஈஸ்வரியின் வயிற்றில் வளர்ந்த சிசுவின் டி.என்.ஏ மற்றும் ராஜ்குமாரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டன.
சமீபத்தில் வெளியான டி.என்.ஏ பரிசோதனை முடிவில், தற்கொலை செய்துகொண்ட ஈஸ்வரியின் கர்ப்பத்திற்குக் காதலன் ராஜ்குமார் தான் காரணம் என்பது உறுதியானது. இந்த அறிவியல் பூர்வமான ஆதாரத்தைத் தொடர்ந்து, சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், இந்த வழக்கு தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளாக மாற்றப்பட்டு, காதலன் ராஜ்குமாரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
