CINEMA
மும்பையில் நடுக்காட்டில் நடந்த பயங்கரம்.. சிறுமி கொடூரக் கொலை… காதலனின் வெறிச்செயல் அம்பலம்.. 24 மணி நேரத்திற்குள் போலீஸ் அதிரடி..!!
மும்பை காண்டிவலி கிழக்கு, தாமுநகர் மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுமி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த சம்தா நகர் போலீசார் மற்றும் மும்பை குற்றப்பிரிவினர், தடயவியல் குழுவின் உதவியுடன் அறிவியல் சான்றுகளைச் சேகரித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். காணாமல் போனவர்களின் பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், இறந்த சிறுமியின் அடையாளம் கண்டறியப்பட்டது. அடுத்தகட்ட விசாரணையில், அச்சிறுமி சூரஜ் மாருதி வாக்மரே என்ற டெலிவரி பையனுடன் நீண்டகாலமாக காதலில் இருந்து வந்தது தெரியவந்தது. சூரஜ் மீது சந்தேகம் வலுத்ததால், போலீசார் உளவுத் தகவல்களின் அடிப்படையில் பொறி வைத்து, 24 மணி நேரத்திற்குள் அவனைக் கைது செய்து கொலை மர்மத்தை உடைத்தனர்.
இந்தக் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா அல்லது இருவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதத்தில் ஆத்திரத்தில் நடந்ததா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் கஜானன் ராஜ்மானே, தடயவியல் சான்றுகள் மற்றும் துல்லியமான தொழில்நுட்ப விசாரணையின் மூலம் இந்த சவாலான வழக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சூரஜிடம் சம்தா நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு கொலைக்கான உண்மையான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது
