CRIME
பகீர்..! போக்ஸோ கைதிக்கு ஜாமீன்… சிறையிலிருந்து வந்த 2 நாட்களில் மனைவி, குழந்தைகள், பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட 6 பேர் கொடூரக் கொலை..!!
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராஜ்குமார் என்ற நபர், அண்மையில் பிணையில் (ஜாமீனில்) வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் பழிவாங்கும் நோக்கில், சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 6 பேரை அவர் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கடந்த மே 16ஆம் தேதி ராஜ்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, தான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் யாரையும் சும்மா விடமாட்டேன் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த அவர், முதலில் தனது சொந்த வீட்டிற்குச் சென்று தனது மனைவி பார்வதி சரிதா, அவரது 4 வயது மகள் மற்றும் 18 மாதக் குழந்தை ஆகிய மூவரையும் கொடூரமாகக் கொலை செய்தார்.
சொந்தக் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய பின்னர், ராஜ்குமார் அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் கிராமத்திற்கு நள்ளிரவில் சென்றுள்ளார். அங்கு வீடுபுகுந்து தம்மீது புகார் அளித்த சிறுமியை முதலில் கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி ருக்கம்மா ஆகியோரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். குற்றவாளி தனது குடும்பத்துடனும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துடனும் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
