CRIME
“காரோடு மாயம்”… கேரளா டூ தென்காசி வந்த வியாபாரிக்கு என்னாச்சு…? சில மணி நேரங்களில் போலீசார் உடைத்த பகீர் கடத்தல் பின்னணி..!!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் இறைச்சிக்காக மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – மேலப்பாவூர் சாலையில் உள்ள தனியார் மாட்டுச் சந்தைக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த ஜூலை 10ஆம் தேதியன்று காலை தனது கார் ஓட்டுநர் நவ்புல் என்பவருடன் வழக்கம்போல் மேலப்பாவூர் சந்தைக்கு மாடு வாங்க வந்த முஸ்தபா, அதன்பின் வீடு திரும்பாமல் காரோடு மாயமாகியுள்ளார்.
முஸ்தபா காணாமல் போனது குறித்து அவரது மகன் கேரள காவல்துறையில் புகார் அளித்தார். கேரள போலீசாரின் தகவலின் பேரில், பாவூர்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்கனி, எஸ்.ஐ. ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.இந்த விசாரணையில், முஸ்தபா செய்து வந்த மாடு வியாபாரம் தொடர்பான பணப் பரிவர்த்தனை தகராறு காரணமாகவே அவர் கடத்தப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
முஸ்தபாவுக்கு முன்பே அறிமுகமான மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது உறவினர்களான கார்த்திக், முத்துராமன், ராமையா, ஓட்டுநர் ராஜ் ஆகிய ஐந்து பேர் இணைந்து முஸ்தபாவையும் அவரது ஓட்டுநரையும் காரில் மதுரைக்குக் கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து போலீசார் உடனடியாகச் செயல்பட்டு கருப்பையா, முத்துராமன், ராமையா, ராஜ் ஆகிய நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.மாடு வியாபாரம் தொடர்பான பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக கேரள வியாபாரி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
