LATEST NEWS
திக் திக் நிமிடங்கள்!.. இ-ஸ்கூட்டர் வெடித்து கட்டிடமே தீக்கிரை..2 பேர் பலி, 100 பேர் மீட்பு.. நொய்டாவை உலுக்கிய கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 66-ல் உள்ள மமுரா பகுதியில், ஐந்து மாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் சார்ஜ் போடப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென வெடித்துச் சிதறியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனங்களுக்கும் அதிவேகமாகப் பரவியதால், தரைத்தளம் முழுவதும் தீப்பிடித்து அடர்ந்த நச்சுப் புகை மேல் தளங்களுக்குப் பரவியது. இதனால் கட்டிடத்தில் இயங்கி வந்த பிஜி தங்கும் விடுதி மற்றும் குடியிருப்புகளில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். பலர் மொட்டை மாடிக்கு ஓடிப் பக்கத்து கட்டிடங்களுக்குத் தாவியும், கட்டுமானத் தொழிலாளர்களின் ஏணி உதவியுடனும் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 100-க்கும் மேற்பட்டோரைப் பத்திரமாக மீட்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக நச்சுப் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்துப் போலீசார் நடத்திய விசாரணையில், விபத்து நடந்த கட்டிடம் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், முறையான பராமரிப்பு இல்லாதது மற்றும் விதிகளுக்குப் புறம்பாகக் குறுகிய இடத்தில் பிஜி தங்குமிடம் நடத்தியது போன்ற கடுமையான விதிமீறல்களும் கண்டறியப்பட்டன. இதையடுத்து, அலட்சியமாகச் செயல்பட்டு விபத்திற்குக் காரணமான கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் அந்த இடத்தை லீசுக்கு எடுத்து பிஜி நடத்தி வந்த நபர் ஆகிய இருவர் மீதும் காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
