LATEST NEWS
“நல்லா மொட்டையடிக்குறாங்கப்பா” உள்ளே நடப்பது ஆன்மீகமா.? இல்ல பிச்சை எடுக்கும் தொழிலா..?” – திருச்செந்தூர் கோவில் பகற்கொள்ளையை தோலுரித்த பக்தரின் வைரல் வீடியோ..!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மொட்டை போடுதல், அர்ச்சனை மற்றும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ரசீது வழங்காமல் சட்டவிரோதமாகப் பணம் பறிக்கப்படுவதாகப் பக்தர் ஒருவர் கோவில் வாசலில் நின்று வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பேசியுள்ள பக்தர், “நானும் என் மனைவியும் தரிசனத்திற்காக தலா 100 ரூபாய் வீதம் மொத்தம் 200 ரூபாய் செலுத்திப் பெற்ற டிக்கெட்டை, தரிசனப் பாதையிலேயே ஊழியர் ஒருவர் வாங்கி வைத்துக்கொண்டார். நாம் செலுத்தும் பணத்திற்கு நம்மிடம் பில் இல்லையென்றால் இது எப்படிச் சரியான நிர்வாகமாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வெளியிலிருந்து 100 ரூபாய்க்கு வாங்கி வந்த அர்ச்சனைப் பையிலிருந்த தேங்காயை ஒரே ஒரு அடி அடித்து உடைத்துக் கொடுத்ததற்காக, கோவிலுக்குள் இருந்த நபர் கூடுதலாக 100 ரூபாய் கேட்டுப் பிடுங்கியதாகவும், அதற்கும் எந்தப் பில்லும் தரப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவிலுக்குள் விற்பனை செய்யப்படும் பன்னீர் பூ போன்ற பொருட்களுக்குத் தயாரிப்புத் தேதியோ, காலாவதித் தேதியோ அல்லது எம்.ஆர்.பி விலையோ இருப்பதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், “வெளியூர்களில் உள்ள கடைகளில் காலாவதித் தேதியைச் சோதிக்கும் அதிகாரிகளுக்கு, கோவில் ஊழியர்களும் பூசாரிகளும் அடிக்கும் இந்தப் பகற்கொள்ளை ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை? பில் இல்லாத இதுபோன்ற திருட்டுத்தனங்கள் வெளியுலகிற்குத் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா?” என்று காரசாரமாகக் கேட்டுள்ளார்.
மேலும், இலவச மொட்டை அடிப்பதற்கான டோக்கன் இருந்தபோதிலும், மொட்டை அடித்து முடித்த தொழிலாளி கட்டாயப்படுத்தி 100 ரூபாய் வாங்கியதாகவும், திருநீறு வழங்கும் பூசாரிகள் மிரட்டும் தொனியில் பணம் கேட்பதாகவும் அவர் சாடியுள்ளார். “உள்ளே நடப்பது ஆன்மீக சேவையா அல்லது பிச்சை எடுக்கும் தொழிலா?” என ஆவேசப்பட்ட அந்தப் பக்தர், இந்து சமய அறநிலையத்துறை உடனடியாகத் தலையிட்டு ஏழை எளிய பக்தர்களை இதுபோன்ற சுரண்டல்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
