LATEST NEWS
“கோட் சூட் போட்ட விவசாயி..!” சட்டப்பேரவையில் வெடித்த திடீர் சலசலப்பு.. நடந்து என்ன..? அமைச்சரை தடுத்து நிறுத்திய சபாநாயகர்..!!
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் தவெக அரசின் இரண்டாவது நாள் பட்ஜெட் கூட்டத்தொடரில், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும் அமைச்சருமான வினோத் 2026-2027-ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். திருக்குறளுடன் தனது உரையைத் தொடங்கிய அவர், உழவர்களின் சிறப்புகளைப் போற்றிப் பேசினார். தொடர்ந்து முதல்வரை “பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகன்” என்றும் “கோட் சூட் போட்ட விவசாயி” என்றும் கவிதைகள் வழியே வெகுவாகப் புகழ்ந்து பேசி வந்தார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து, குறுக்கிட்ட சபாநாயகர், அவை முன் வைக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையை மட்டும் வாசிக்குமாறு அறிவுறுத்தினார்.
சபாநாயகரின் உத்தரவிற்கேற்ப வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அமைச்சர் வினோத், விவசாயத்தின் வளர்ச்சிப் பாதையையும் உழவர்களின் பிரச்சனைகளையும் தனது உரையில் எடுத்துரைத்தார். உழவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், ‘சூப்பர் எல் நினோ’ காலநிலை மாற்றத்தால் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரித்தார். இந்தச் சவாலைச் சமாளிக்க, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் “மாவட்ட வேளாண்மை இடர் மேலாண்மை திட்டம்” மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார்.
