LATEST NEWS
ஐய்யோ… 100 கிலோமீட்டருக்கு மேல் மிதந்து வந்த சடலங்கள்… நிரம்பி வழியும் பிணவறைகள்… பேரழிவில் சிக்கி நிலைகுலைந்த நேபாளத்தில் நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட போதே கோஷி திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக, பலியானவர்களின் உடல்கள் ஆற்றின் கீழ்நோக்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டு கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ரசுவா மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள், திரிசூலி மற்றும் நாராயணி ஆற்றுப் படுகைகளின் வழியாக அடித்து வரப்பட்டு சித்வான், தனஹுன், நவல்வராசி மற்றும் கோர்கா போன்ற தொலைதூர மாவட்டங்களில் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனை பிணவறைகள் உடல்களால் நிரம்பி வழிகின்றன.
மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளின் கொள்ளளவை விட அதிக அளவில் உடல்கள் கண்டெடுக்கப்படுவதால், அரசு நிர்வாகம் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, சித்வான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை பிணவறைகளில் 30 முதல் 50 உடல்களை மட்டுமே வைக்க முடியும் என்ற நிலையில், பரத்பூரில் 250 உடல்களைப் பாதுகாக்கும் வகையில் தற்காலிக மையம் அமைக்கப்பட்டு வருகிறது. உடல்கள் சிதைவடைவதைத் தடுக்க குளிரூட்டும் வசதிகள், ஏசி மற்றும் உலர் பனிக்கட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், போக்காரா போன்ற அருகில் உள்ள பிற மாவட்டங்களின் பிணவறைகளுக்கும் உடல்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
வெள்ளத்தில் காணாமல் போன தங்களுடைய அன்புக்குரியவர்களைத் தேடி, ரசுவா, நுவாகோட் மற்றும் கோர்கா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான குடும்பத்தினர் புகைப்படங்களுடன் சித்வான் மற்றும் போக்காரா பகுதிகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். அடையாளம் தெரியாத உடல்களைக் கண்டறிய காவல்துறையினர் உடல்களைப் புகைப்படம் எடுத்தல், கைரேகைகள் சேகரித்தல், உடற்கூறாய்வு செய்தல் மற்றும் DNA மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு வருகின்றனர். அடையாளம் காண முடியாத உடல்களுக்குத் தனிப்பட்ட டேக் எண்கள் மற்றும் QR குறியீடுகள் வழங்கப்பட்டு, எதிர்காலத்தில் உறவினர்கள் உரிமை கோர ஏதுவாகத் தகுந்த பாதுகாக்கப்பட்ட இடங்களில் அடக்கம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
