LATEST NEWS
வெட்கக்கேடு..! நில ஆசையால் செத்துப் போன பாசம்… தந்தையின் பிணத்தை வைத்து 39 மணி நேரம் சண்டையிட்ட பிள்ளைகள்..! ஜான்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு தந்தை இறந்த பிறகு, அவருக்கு இறுதிச் சடங்கு செய்வதற்குப் பதிலாக நிலத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாகக் குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், இறந்தவரின் சடலம் சுமார் 39 மணி நேரமாக வீட்டிலேயே வைக்கப்பட்டு, நிலத்தைத் திரும்பத் தருவது தொடர்பாக மகனுக்கும் மகளுக்கும் இடையே தகராறு நீடித்தது. இறுதியில், இருதரப்பிலும் ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரே தந்தையின் இறுதிச் சடங்குகள் செய்து முடிக்கப்பட்டன.
இச்சம்பவம் சமதர் காவல் எல்லைக்குட்பட்ட சிர்காவ்ன்குர்த் கிராமத்தில் நடந்துள்ளது. இங்கு வசித்து வந்த தாக்குர்தாஸ் குஷ்வாஹா என்பவர் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காலமானார். அவர் இறப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு, தனக்குச் சொந்தமான சுமார் ஐந்து பிகா நிலத்தில் இரண்டு பிகா நிலத்தை மகள் அங்கூரியின் பெயருக்குப் பதிவு செய்து கொடுத்துள்ளார். தந்தை இறந்ததும், அவருடைய இரு மகன்களும் இந்த நிலப் பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்குச் சேர வேண்டிய நிலத்தை சகோதரி தங்கள் பெயருக்குத் திரும்பப் எழுதி வைக்கும் வரை தந்தையின் இறுதிச் சடங்கைச் செய்ய விடமாட்டோம் என்று கூறிப் பிடிவாதம் பிடித்தனர்.
தந்தையின் சடலம் வீட்டிலேயே வைக்கப்பட்ருந்த நிலையில், துக்கம் அனுசரிப்பதற்குப் பதிலாக நிலத்தைப் பற்றிய பேச்சுவார்த்தையும் தகராறுமே குடும்பத்தில் நீடித்தது. உறவினர்களும் கிராம மக்களும் எவ்வளவோ எடுத்துக்கூறி சமாதானப்படுத்த முயன்ற பிறகு, மகள் அங்கூரி நிலத்தைத் திரும்பக் கொடுக்க ஒப்புக்கொண்டார். நிலப் பத்திரப் பதிவை ரத்து செய்வதற்காகக் குடும்பத்தினர் மோத் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றனர். ஆனால், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பத்திரப் பதிவு செயல்முறை உடனடியாக முடியாததால் இறுதிச் சடங்கு செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர், நிலத்தைத் திரும்பத் தருவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகே குடும்ப தகராறு அமைதியடைந்து, சுமார் 39 மணி நேரத்திற்குப் பிறகு தாக்குர்தாஸின் சடலத்திற்கு இறுதிச் சடங்கு செய்யப்பட முடிந்தது.
