CRIME
பகீர்..! உண்டியலைத் தொடக்கூட இல்லை… 3 பூட்டுகளை உடைத்து மரகத சிலையை மட்டும் தூக்கிச் சென்ற மர்ம கும்பல்..! நடு பழனியில் நள்ளிரவில் நடந்த துணிகர திருட்டு ..!!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பெருங்கருணை கிராமத்தில் கனக மலை குன்றின் மீது நடுபழனி தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. வடபழனிக்கும் பழனிக்கும் நடுவில் உள்ளதால் ‘நடுபழனி’ என்றழைக்கப்படும் இக்கோவிலில் சுமார் 3 அடி உயரத்தில் மூலவர் மரகத முருகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலை கர்நாடக மாநில ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் அறக்கட்டளை மற்றும் கிராம மக்கள் நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கம் போல் இரவு பூஜை முடிந்து பூட்டப்பட்ட கோவிலை மறுநாள் காலை பூசாரி திறந்தபோது, கருவறையில் இருந்த 3 அடி உயர மூலவர் மரகத தண்டாயுதபாணி சிலை திருடுபோயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சித்தாமூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று ஆய்வு செய்ததில், மர்ம கும்பல் மலையின் பின்பக்கமாக வந்து கருவறையின் 3 கதவுகளின் பூட்டுகளை உடைத்து கைவரிசை காட்டியது தெரியவந்தது.
கோவிலில் இருந்த உண்டியலை உடைக்காமல், விலைமதிப்பற்ற மரகத சிலையை மட்டுமே குறிவைத்து இக்கொள்ளை நடந்துள்ளது. கோவில் மண்டபம் மற்றும் கருவறையில் இருந்த கண்காணிப்பு கேமரா வயர்களை கொள்ளையர்கள் துண்டித்திருந்தாலும், பின்பக்க கேமராவில் 2 கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தை டி.எஸ்.பி. தீபக் ரஜினி பார்வையிட்ட நிலையில், இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
