LATEST NEWS
“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி கர்ப்பமாக்கிட்டான் சார்.” கண்ணீருடன் கதறிய சென்னை பெண் போலீஸ்: சக போலீஸ்காரரின் பகீர் லீலை..!
சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் போலீஸ் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய போலீஸ்காரர் மீது பாலியல் மற்றும் ஏமாற்றுப் புகார் அளித்துள்ளது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டையில் தனியாக வசித்து வரும் இந்த பெண் போலீசுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சக போலீஸ்காரர் ஒருவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது.
இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த போலீஸ்காரர் பெண் போலீசுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், இந்த குடும்ப வாழ்க்கையின் காரணமாகப் பெண் போலீஸ் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், அந்த போலீஸ்காரர் வற்புறுத்தியதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரது கரு கலைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கரு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த போலீஸ்காரரின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண் போலீசை திருமணம் செய்ய மறுத்த அவர், அவருடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்துக் கொண்டு விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னை ஏமாற்றி, வாழ்க்கையைச் சீரழித்த அந்த போலீஸ்காரர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரரிடம் தீவிர விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
