CRIME
“அடச்சீ.. மனுஷனா இவன்…!” மின்தடையைப் பயன்படுத்தி 60 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய கொடூரன்… நள்ளிரவில் அரங்கேறிய “பகீர் சம்பவம்..!!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய அமுதவள்ளி. திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் மாலை முதல் இரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த மின்தடையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்மநபர் ஒருவர், அமுதவள்ளியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரைத் தாக்கி துன்புறுத்தியதுடன் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததைக் கண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து உடனடியாக சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அதே கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கோபாலகிருஷ்ணன் என்பவரைக் கைது செய்தனர். அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. தனியாக வசித்து வந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி தாக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதுடன், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
