LATEST NEWS
“இது பாஜகவுக்கு காட்டும் விசுவாசமா..?” – மெரினாவில் நீட் போராட்டம் ஒடுக்கப்படுவது ஏன்..? முதல்வர் விஜயிடம் அப்பாவு பகிரங்க கேள்வி..!!
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் அறவழியில் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை மத்திய அரசு தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒடுக்கி வருவதற்குத் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் ஜனநாயக ரீதியிலான குரல்வளையை நசுக்கும் வகையில் மத்திய பாஜக அரசின் இந்த கொடூரமான நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குரல் கொடுக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களைத் தமிழகப் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, நீட் எதிர்ப்புப் போராட்டக் களமாக மெரினா கடற்கரை மாறிவிடக் கூடாது என்பதற்காக அங்கு 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பொதுமக்களின் நுழைவிற்கே தடை விதித்து ஒடுக்குமுறையைக் கையாள்வது ஏன் என்று முதல்வர் விஜயிடம் அப்பாவு காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தமிழக அரசு இத்தகைய கடுமையான அடக்குமுறைகளைப் பிரயோகிப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “இது மத்திய பாஜக ஆட்சிக்கு முதல்வர் விஜய் காட்டும் விசுவாசமா?” என்று மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். நீட் குளறுபடிகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மாணவர்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
