CRIME
“நள்ளிரவில் பூட்டிய வீட்டிற்குள் கேட்ட அலறல் சத்தம்..!” திட்டமிட்டு நடந்த வேட்டை.. வங்கியதிகாரியின் மனைவியைக் குறிவைத்தது யார்..? பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!
பீகார் மாநிலம் பூர்ணியா நகரில் உள்ள ரேணு நகரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுபனி கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வரும் ராஜ்குமார் யாதவ் என்பவர், குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியைப் பணியாற்றி வந்த தனது மனைவி ஷாலினி குமாரியை மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இச்சம்பவத்தை தம்பதியரின் 9 வயது மகன் நேரில் பார்த்த சாட்சியாக இருந்துள்ளான். மனைவியைக் சுட்டுக் கொன்ற பிறகு, ராஜ்குமார் யாதவ் இரு குழந்தைகளையும் வீட்டிற்குள் இருக்குமாறு கூறிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சம்பவம் நடந்த உடனடியாக, 9 வயது சிறுவன் பதற்றத்துடன் அழுதுகொண்டே தனது தாய்மாமன் கௌரி சங்கருக்கு போன் செய்து, “மாமா! அப்பா அம்மாவை சுட்டுவிட்டார்” என்று கதறியுள்ளான். குடும்பத்தினர் உடனடியாக ரேணு நகரில் உள்ள வீட்டிற்கு விரைந்து வந்தபோது, ஷாலினி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே தங்களுக்குள் சண்டை நடந்து வந்ததாகவும், சம்பவத்தன்று கோபத்தில் “இன்று உன்னைக் கொன்று எல்லாவற்றையும் முடித்துவிடுகிறேன்” என்று கூறி, துப்பாக்கியை எடுத்து வந்து அம்மாவின் மார்பில் சுட்டதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஷாலினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூர்ணியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கித் தோட்டாவின் உறை கைப்பற்றப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறே இந்த கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய வங்கி மேலாளர் ராஜ்குமார் யாதவைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இரு அப்பாவிச் சிறுவர்களையும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
