LATEST NEWS
உதயநிதியை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைங்க… அதுதான் முதல்வர் விஜய்க்குப் பெருமை… சர்ச்சை பேச்சு குறித்து பாஜக நாராயணன் திருப்பதி பரபரப்பு பதிவு…!!
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பேசிய இரட்டை அர்த்த பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது அருவருப்பானது, கேவலமானது மற்றும் வெட்கக்கேடானது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உண்மையான தாய், மனைவி, மகள் உள்ள எந்தவொரு நபரும் பொதுவெளியில் இப்படி இழிவாகப் பேச மாட்டார் என்றும், இவரின் இத்தகைய பேச்சுகளை எந்தவொரு குடும்பப் பெண்ணும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கொதிப்புடன் தெரிவித்துள்ளார்.
“திராவிட மாடல்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தரம் தாழ்ந்த நபர்கள் பொதுமேடைகளில் இப்படி ஆபாசமாகப் பேசுவதை, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது அநாகரிகமானது என்றும் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் நாகரிகமற்றுப் பேசும் இத்தகைய போக்குகள் தமிழகத்தின் பொது விவாதச் சூழலையே கெடுப்பதாக உள்ளதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை விட, இந்தத் தரங்கெட்ட பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலினை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைப்பதுதான் முதலமைச்சர் விஜய்க்கு உண்மையான பெருமை சேர்க்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுவெளியில் தரம் தாழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலினின் இந்த விவகாரத்தில் நாட்டின் நீதிமன்றங்கள் உரிய தண்டனை வழங்குமா அல்லது எளிதாகப் பிணை வழங்கி விடுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போது சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருவதால் தமிழக அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
