CRIME
காதலால் வந்த வினை..! உறவுக்காரப் பெண்ணைக் காதலித்த சட்டக்கல்லூரி மாணவர் கொடூரக் கொலை… தம்பியைக் கொல்ல முயன்றபோது நடந்த விபரீதம்..! பின்னணியில் இருந்த அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்..!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன். இவர் மானாமதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சிவபாலன் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் முருகேசன் என்பவரின் மகளைக் காதலித்து வந்துள்ளார். ஒரே ஊர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினருக்குக் காதல் விவகாரம் தெரியவந்து, இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இருவரும் காதலைக் கைவிடவில்லை. மேலும் பெண்ணின் தம்பி அருண்ராஜா இவர்கள் காதலுக்கு எதிராக இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன் பெண்ணின் தம்பியைக் கொலை செய்வதற்காகச் சென்றுள்ளார். இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சிவபாலனை வழிமறித்துக் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த சிவபாலன் ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில், கொலையில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை மற்றும் தம்பியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிவபாலன் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
