LATEST NEWS
“அவள் நாகினியாக மாறிவிட்டாள்..!” ஒரே இரவில் மர்மமாக மறைந்த 20 வயது பெண்… படுக்கையில் 5 அடி பாம்புத்தோலை போட்டு குடும்பத்தையே ஏமாற்ற முயன்ற பெண்ணின் அதிர்ச்சி பின்னணி..!!
உத்தரப் பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு இளம் பெண் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான அந்தப் பெண், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அறைக்கு உறங்கச் சென்ற நிலையில், மறுநாள் காலை காணாமல் போனதுடன் அவர் ஒரு பாம்பாக மாறியதாக கிராமம் முழுவதும் பரவிய செய்தி ஒரு திரில்லர் படக் கதையையே மிஞ்சும் வகையில் அமைந்தது. குடும்பத்தினரின் கூற்றுப்படி, வழக்கம்போல தூங்கச் சென்ற பெண்ணை மறுநாள் காலை தாய் எழுப்பச் சென்றபோது, படுக்கை காலியாக இருந்ததுடன், அவரது ஆடைகளும் நகைகளும் படுக்கையில் கிடந்துள்ளன. மேலும் அவற்றுக்குச் சற்று அருகில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்புத் தோல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதால், அந்தப் பெண் உருமாறும் ‘இச்சாதாரி நாகினி’யாக மாறிவிட்டதாக வதந்தி கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.
இச்சம்பவத்தால் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்த அக்குடும்பத்தினர், தங்கள் மகள் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும் என காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு வேண்டுகோள் விடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் தந்தையின் புகாரைத் தொடர்ந்து பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 87-ன் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பின்னணியில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்து வந்ததும், குடும்பத்தினர் அவருக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயித்ததால், காதலனுடன் ஊரைவிட்டு ஓடிச்செல்லத் திட்டமிட்டதும் தெரியவந்தது. குடும்பத்தாரைத் திசைதிருப்புவதற்காகவே, தனது கனவில் அடிக்கடி பாம்பு வருவதாகக் கூறி நாடகமாடியுள்ளார். பெண்ணின் தாயார் தொலைபேசியைப் பயன்படுத்தி காதலனுக்குத் தொடர்பு கொண்டதை போலீசார் கண்காணித்து, அந்த எண்ணைக் கண்டறிந்ததன் மூலம் பெண்ணின் திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.
