LATEST NEWS
3 குழந்தைகளைப் பலிவாங்கிய வென்டிலேட்டர் வெடிப்பு… மகாராஷ்டிராவை உலுக்கிய மருத்துவமனை தீ விபத்து – விசாரணைக்கு அதிரடி உத்தரவு..!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வெண்டிலேட்டர் கருவி திடீரென வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த சமயத்தில் அந்த வார்டில் மொத்தம் 39 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடனேயே அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் துரிதமாகச் செயல்பட்டு மற்ற குழந்தைகளைப் பத்திரமாக வெளியே மீட்டனர். இதில் கடுமையான பாதிப்புக்குள்ளான 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய மருத்துவமனையில் இப்படி ஒரு அலட்சியமான விபத்து நடந்தது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்டப் பொறுப்பு அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விபத்துக்குக் காரணமான பழுதடைந்த மருத்துவக் கருவிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
