CRIME
“நாங்க கடத்தினது உண்மைதான்… ஆனா காரணம் இதுதான்..!” பின்னணியை தோண்டித் துருவிய போலிஸுக்குக் காத்திருந்த திடுக்கிடும் திருப்பம்..!!!
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியைச் சேர்ந்த 25 வயதான தேப்ஜித் ரானா என்ற தொழில் அதிபர், திருப்பூரில் ஜவுளித் தொழில் செய்து வந்தார். தனது ஜவுளித் தொழிலில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாக உறுதியளித்ததை நம்பி, கோவையைச் சேர்ந்த ஆனந்தகுமார், செந்தில்குமார் உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து ரூ.80 லட்சம் வரை முதலீடு செய்தனர். ஆனால், குறிப்பிட்டபடி கூடுதல் லாபத்தையோ அல்லது அசல் முதலீட்டுத் தொகையையோ திருப்பிக் கொடுக்காமல் தேப்ஜித் ரானா ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் மற்றும் செந்தில்குமார் தலைமையிலான 10 பேர் கொண்ட கும்பல், கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த தேப்ஜித் ரானா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை காரில் கடத்திச் சென்றனர். கடத்திச் செல்லப்பட்ட இடத்தில் வைத்து அவர்களிடம் இருந்த ரூ.26 லட்சம் பணம் மற்றும் 1 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு அவர்களை விடுவித்தனர். இச்சம்பவம் குறித்து தேப்ஜித் ரானா பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த வினோத், வினோத்குமார், திருச்சியைச் சேர்ந்த சண்முகராஜ் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 4 பேரைக் கைது செய்து, மீதமுள்ள 6 பேரைத் தேடி வந்தனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கடத்தல் சம்பவத்திற்குப் பின்னால் இருந்த அதிர்ச்சி திருப்பம் வெளிச்சத்திற்கு வந்தது. தங்களது ரூ.80 லட்சத்தை ஏமாற்றியதாலேயே தேப்ஜித் ரானாவைக் கடத்திப் பணத்தைப் பறித்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செந்தில்குமார் அளித் புகாரின் பேரில், பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட தேப்ஜித் ரானா மற்றும் அவரது நண்பர் சித்தார்த் சர்மா ஆகியோரையும் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கைது செய்தனர். தொழில் அதிபர் கடத்தல் வழக்கில், கடத்தப்பட்டவரே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
