LATEST NEWS
“டாக்டராகணும்ங்குறது என் லட்சியம்… நீட் தேர்வில் சாதித்த மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் உருக்கம்..!!!”
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் வடக்கு குமரன் சாலையைச் சேர்ந்தவர் தமிழரசன். பசுமாடுகளை வளர்த்து, மாடு மேய்க்கும் தொழில் செய்து வரும் இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களது 20 வயது மகள் பிரியதர்ஷினி, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து முடித்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்ததில் இருந்தே, எப்படியாவது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற பெரிய கனவோடு அவர் தீவிரமாகத் தயாராகி வந்தார்.
பிரியதர்ஷினியின் விடாமுயற்சிக்குக் கிடைத்த பலனாக, கடந்த ஜூன் மாதம் நடந்த நீட் மறு தேர்வை அவர் எழுதினார். வறுமையான குடும்பச் சூழலிலும் கடினமாகப் படித்து, அண்மையில் வெளியான அந்த மறு தேர்வு முடிவுகளில் 720-க்கு 502 மதிப்பெண்கள் பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். இந்தத் தேர்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவியான இவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
தற்போது நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ள பிரியதர்ஷினி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கக் காத்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பாணை இன்னும் வரவில்லை என்றும், வந்தவுடன் கலந்தாய்வில் பங்கேற்றுத் தனது மருத்துவக் கனவை நனவாக்கப் போவதாகவும் அவர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
