LATEST NEWS
“வேன் உள்ளே அடைக்கப்பட்ட மாணவர்கள்… இடமில்லாததால் கூரையின் மேல் அமர வைத்து பறந்த வாகனம்..! இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாகனத்தில், பள்ளி மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அப்சல்கர் பகுதியில் இயங்கி வரும் ‘ராகி மெமோரியல் வித்யா நிகேதன் ஜனதா இன்டர் காலேஜ்’ என்ற பள்ளிக்குச் சொந்தமான மாருதி ஈகோ வேனில் தான் இந்த விதிமீறல் நடந்துள்ளது.
அந்த பள்ளி வேனுக்குள் அதன் கொள்ளளவை விட பல மடங்கு அதிகமான மாணவர்கள் திணித்து அமரவைக்கப்பட்டிருந்தனர். வேனுக்குள் சிறிதும் இடமில்லாத சூழல் ஏற்பட்டதால், ஓட்டுநர் சில பள்ளிச் சிறுவர்களை வேனின் மேல் கூரையிலும் அமர வைத்து ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார். கிராமப்புறச் சாலைகளில் வேகமாகச் சென்ற இந்த வேன் நிலைதடுமாறியிருந்தாலோ அல்லது திடீரென பிரேக் அடிக்கப்பட்டிருந்தாலோ கூரையில் இருந்த குழந்தைகள் கீழே விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும்.
சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சியைக் கண்டு, தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தங்களின் பிள்ளைகளின் பாதுகாப்பைக் குறித்துப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபமும் அச்சமும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிஜ்னோர் காவல்துறையும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் ஓட்டுநர் மீது கடும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
