LATEST NEWS
“எங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக-விடம் ஆஃபர்கள் தயார்… நேற்று இரவு வரை குதிரை பேரம்…!”அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி..!!
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தவெக தலைமையிலான அரசை வீழ்த்துவதற்காக, எதிர்க்கட்சியான திமுக சபாநாயகருக்கு எதிராகப் புகார்களைக் கிளப்பி வருவதாகத் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தலா 40 முதல் 50 கோடி ரூபாய் வரை கொடுத்து விலைக்கு வாங்க திமுக முயன்று வருவதாகவும், நேற்று இரவு வரை இந்த சட்டவிரோதக் குதிரை பேர முயற்சிகள் திமுக தரப்பில் தொடர்ந்ததாகவும் அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரும்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், திமுக தலைமை மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஆஃபர்கள் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாடியுள்ளார். மேலும், இந்த சதி நெட்வொர்க்கில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பத்திரப்பதிவுத் துறையில் நடைபெற்ற அடுக்கடுக்கான போலிப் பத்திர மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் நிர்மல் குமார் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். பத்திரப்பதிவுத் துறையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் பலர் முறைகேடாக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நில மோசடி மற்றும் போலிப் பத்திரப் பதிவுகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் யாராக இருந்தாலும் பயமின்றித் தங்களின் புகார்களைத் தெரிவிக்கலாம் என்றும், இதில் அரசு யாரையும் மன்னிக்காமல் 100% கிரிமினல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
