LATEST NEWS
“பணத்தடை இனி படிப்பைத் தடுக்காது… முதல்வர் விஜயின் அதிரடி திட்டம்..!நிம்மதியில் பெற்றோர்… குஷியில் மாணவர்கள்..!!”
பொருளாதாரக் காரணங்களால் எந்தவொரு மாணவரும் தனது உயர்கல்வியைப் பாதியில் நிறுத்தக் கூடாது என்ற நோக்கில், பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்குப் ‘பிணையில்லா கல்விக் கடன்’ வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் எவ்விதப் பிணையும் இன்றி எளிதாகக் கல்விக்கடன் கிடைப்பதை உறுதி செய்ய இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவிப் பேராசிரியர் தகுதியில் ஒரு ‘ஒருங்கிணைப்பு அலுவலர்’ நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கென பிரத்தியேக அலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. முன்னணி வங்கிகளின் உயர் அலுவலர்கள் மூலம் முறையான பயிற்சி பெற்றுள்ள இந்த அலுவலர்கள், கடன் பெற விரும்பும் மாணவர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டு, கல்விக்கடன் பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் மாணவர்களுக்கு வழங்குவார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள், ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறுப்பு அலுவலருடன் இணைந்து செயல்படுவர். மாவட்ட வாரியாகப் பெறப்படும் கல்விக்கடன் விண்ணப்பங்கள் மற்றும் வங்கிகளின் விவரங்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்விக்கடன் அலுவலர்களுடன் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, மாணவர்களுக்குத் தாமதமின்றி கல்விக்கடன் கிடைப்பதை உறுதி செய்வார்கள்.
