LATEST NEWS
“நான் யார் கூட சேர்ந்திருக்கேன் தெரியுமா?”.. பள்ளி மாணவர்களிடம் கெத்து காட்டிய மாஜி அமைச்சர்.. காரை காட்டி மாணவர்கள் கொடுத்த மரண மாஸ் ட்விஸ்ட்..!!
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகி, அண்மையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையின் கிராமப்புறப் பகுதி ஒன்றில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. தனது காரில் இருந்து இறங்கி அங்கிருந்த அரசு பள்ளி மாணவர்களிடம் பேசும் அவர், “நான் யார் கூட சேர்ந்துள்ளேன் என்று தெரியுமா?” எனக் கேட்கிறார். அதற்கு அங்கிருந்த மாணவர்கள் சற்றும் யோசிக்காமல், அவரது காரின் முன்பக்கத்தில் பறந்து கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியைச் சுட்டிக்காட்டி, “தளபதி விஜய்” எனக் கைகளைத் தூக்கி உற்சாகமாகப் பதிலளிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, “நான் விஜய் மாமாவுடன் போட்டோ எடுத்துள்ளேன், அதைப் பார்த்தீர்களா?” என்று அன்போடு கேட்கும் சி.விஜயபாஸ்கர், உடனடியாகத் தனது மொபைல் போனை எடுத்து விஜய்யுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அந்த மாணவர்களிடம் காட்டி மகிழ்கிறார். “உங்களுக்கு விஜய் மாமாவை பிடிக்குமா?” என்று அவர் கேட்க, மாணவர்கள் “விஜய்யையும் பிடிக்கும், உங்களையும் பிடிக்கும்” என மழலை மாறாமல் பதிலளித்து நெகிழ வைக்கின்றனர். இறுதியாக, மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அன்புடன் அறிவுரை கூறி சி.விஜயபாஸ்கர் அங்கிருந்து விடைபெறும் காட்சிகள் தவெக தொண்டர்கள் மற்றும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
