LATEST NEWS
“சாட்சிகளை மிரட்டுறாங்க!”.. உச்ச நீதிமன்றம் கொடுத்த செம டோஸ்!.. அடுத்த சில மணி நேரத்திலேயே சி.பி.ஐ-யிடம் ஓடிய ஆர்.எஸ்.பாரதி.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு புதிய சிக்கல்?.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாகச் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் சூழலில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசர இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கரூர் வழக்கு தொடர்பாக அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நிவாரண விவகாரங்களை நீதிமன்றமே கண்காணிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இல்லையெனில் சி.பி.ஐ. விசாரணை திசை மாற வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்ட திமுக தரப்பு, விடுமுறைக் கால அமர்வு மூலம் இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் திமுக தரப்பிற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். “முதல்வர் விஜய்யின் பேச்சை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களா? கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகத் தடை விதிக்கக் கோருகிறீர்களா? உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்; உங்கள் சண்டையை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்” என்று நீதிபதிகள் அதிரடியாகக் கூறினர். மேலும், திமுக ஆட்சியில் பதிவான இந்த வழக்கில் விஜய் குற்றம்சாட்டப்பட்ட நபராகச் சேர்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆவணங்களைச் சரியாகப் படித்துவிட்டு நீதிமன்றத்தில் வாதிடுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, திமுக தரப்பு தங்களது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சி.பி.ஐ-யிடம் புதிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், குற்றம் சாட்டப்பட்டவரான ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சாட்சிகளை அச்சுறுத்தும் வகையிலும், விசாரணையைத் திசை திருப்பும் வகையிலும் அமைந்துள்ளதால் அவர் மீது தனி வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், வரும் ஜூலை 10-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் கரூர் செல்வதை சி.பி.ஐ. அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அந்தப் புகார் மனுவில் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.
