CRIME
“மன்னிச்சிருங்க அப்பா, 50 முறை முயன்றும் தோத்துட்டேன்” அரசு வேலை கிடைக்கல.. ஆளுநரிடம் கோல்டு மெடல் வாங்கிய பி.டெக் மாணவன் எழுதிய பகீர் தற்கொலை கடிதம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பலமுறை முயற்சித்தும் அரசு வேலை கிடைக்காத விரக்தியில், 23 வயதான பி.டெக் தங்கப் பதக்க வெற்றியாளர் ஆனந்த் குமார் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் கான்பூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதலிடம் பிடித்த இவர், மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியவர் ஆவார். இதற்காக உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கைகளால் தங்கப் பதக்கமும் பெற்றிருந்தார்.
இவரது குடும்பத்தினர் மூத்த மகனின் திருமணப் பேச்சவார்த்தைக்காக பீகார் சென்றிருந்த நேரத்தில், கோவிந்த் நகரில் உள்ள தனது மூன்று அடுக்கு வீட்டில் ஆனந்த் குமார் தனியாக இருந்துள்ளார். நீண்ட நேரமாக அவர் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த வீட்டுப் பணிப்பெண் அண்டை வீட்டாரிடமும், காவல்துறையிடமும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்து காவல்துறை ஐந்து வரிகள் கொண்ட தற்கொலைக் கடிதம் ஒன்றை மீட்டுள்ளது.
அதில், “மன்னித்துவிடுங்கள் அப்பா, அரசு வேலை வாங்குவதற்காக நான் கிட்டத்தட்ட 50 முறை முயற்சி செய்தேன், ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று ஆங்கிலத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். அவரது தந்தை ராஜ்குமார் கூறுகையில், தனது மகன் படிப்பை முடித்த பிறகு ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கிகள் மற்றும் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதியதாகவும், எதிலும் தேர்ச்சி பெறாததால் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
