LATEST NEWS
பணம் கொடுத்தா தான் வேலை நடக்கும்… லஞ்சப் பணத்தில் ரசாயனம் தடவி விவசாயி வைத்த செக்.. கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலர்..! கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி கைது..!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலர் மற்றும் தற்காலிக கணினி இயக்குநர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
பூம்பாறையைச் சேர்ந்த விவசாயி ராஜா என்பவர், தன் தந்தையின் பெயரில் இருந்த சொத்து வரியைத் தனது பெயருக்கு மாற்றுவதற்காகப் பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது, பெயர் மாற்றம் செய்து தருவதற்கு ஊராட்சி செயலர் முருகேசன் ரூ.10 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை தர முடியாது என ராஜா கூறிய நிலையில், பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் எனக் கூறி தொகையை ரூ.4 ஆயிரமாகக் குறைத்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா, இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்தை ராஜாவிடம் கொடுத்து, ஊராட்சி செயலரிடம் வழங்குமாறு அனுப்பினர். அதன்படி பூம்பாறை ஊராட்சி அலுவலகத்திற்கு ராஜா சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து சென்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது ஊராட்சி செயலர் முருகேசன் மற்றும் தற்காலிக கணினி இயக்குநர் ராஜா சண்முகம் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய பணத்தை ராஜா வழங்கினார். பணத்தைப் பெற்றுக் கொண்டதை உறுதி செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், உடனடியாக இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து லஞ்சப் பணத்தைப் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
