CINEMA
வசூலில் சாதனை… சர்ச்சையில் வேதனை! ‘கருப்பு’…!”மனம் புண்பட்டிருந்தால் மன்னிச்சிருங்க…”சூர்யா படத்தில் அஜித்தை நக்கல் செய்த ஆர்.ஜே.பாலாஜி…!
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வரும் திரைப்படம் ‘கருப்பு’. சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே இப்படம் பெற்று வரும் அமோக வரவேற்பு ஒட்டுமொத்த படக்குழுவையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய பிரம்மாண்ட வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு இடையே, படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
படத்தின் இரண்டாம் பாதியில், இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான ‘அலையோசை’ திரைப்படத்தின் “போராடடா.. ஒரு வாள் ஏந்தடா” என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும். மேலும், அந்தப் பாடலைத் தங்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பு காப்புரிமை கேட்டு வழக்குத் தொடுத்துவிட்டது போன்ற ஒரு காட்சியும் அதில் நீளும். இது இளையராஜாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, படக்குழு மீது நிஜமாகவே சட்டப்படி வழக்குத் தொடர வேண்டும் என்ற பதிவுகளும் இணையத்தில் உலா வரத் தொடங்கின. இதனால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனைத் புண்படுத்தும் உள்நோக்கம் படக்குழுவிற்குச் சிறிதளவும் இல்லை; செய்தியைக் கடத்துவதற்காக தற்செயலாக வைக்கப்பட்ட அந்தக் காட்சியால் இளையராஜா ஐயாவோ, அவரது ரசிகர்களோ மனமுடைந்திருந்தால் அதற்குத் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குழுவின் இந்த விளக்கம் வைரலாகி வரும் அதே வேளையில், படத்தில் “இவரு பெரிய அஜித்குமாரு… முதுகுல குத்துறாங்களாம்” என்ற நக்கல் வசனம் இடம்பெற்றிருப்பதைக் சுட்டிக்காட்டி, சில அஜித் ரசிகர்களும் தங்களின் வருத்தங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
