LATEST NEWS
ஆயிரக்கணக்கான பாம்புகளை மீட்ட ‘ஸ்நேக் லேடி’… ஒரு நொடி தளர்ந்த பிடியால் நேர்ந்த விபத்து..! பதறவைக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் வால்மீகிநகர் பகுதியைச் சேர்ந்த ஜானகி தேவி, அப்பகுதி மக்களால் அன்போடு “பாம்புகளின் தோழி” என்று அழைக்கப்படுகிறார். கடந்த பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான விஷப்பாம்புகளை எவ்வித கட்டணமும் இன்றி மீட்டு, காடுகளில் விட்டு சமூக சேவை செய்து வரும் பெருமைக்குரியவர். சமீபத்தில், அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள அரிய வகை கிங் கோப்ரா பாம்பைப் பிடிப்பதற்காக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
அந்தப் பெரிய ராஜநாகத்தை மிகுந்த துணிச்சலுடன் ஜானகி தேவி மீட்ட போதிலும், அதனைப் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் வழியில் எதிர்பாராத விபத்து நேர்ந்தது. பாம்பின் மீதான அவரது பிடி சற்றே தளர்ந்த தருணத்தைப் பயன்படுத்தி, அந்த அதிபயங்கர நச்சுப் பாம்பு ஜானகி தேவியை எதிர்பாராதவிதமாகக் கடித்தது. இந்தச் சம்பவம் அந்த இடத்திலிருந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
பாம்பு கடித்ததைத் தொடர்ந்து, ஜானகி தேவிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக அண்டை நாடான நேபாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் தற்போது அவருக்கு தீவிர நச்சுமுறிவு மற்றும் மருத்துவக் கண்காணிப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஜானகி தேவி விரைவில் நலம்பெற வேண்டும் என உள்ளூர் மக்களும் வனத்துறை அதிகாரிகளும் வாழ்த்தி வருகின்றனர்.
