LATEST NEWS
“சினிமா பாணியில் சேஸிங்..! முகத்தை மூடிட்டு குழந்தையோட ஓடிய பெண்…சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!”
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கௌரிகாட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சக பெண் தொழிலாளியுடன் நட்பாகப் பழகி, அவருடைய குழந்தையை ஒரு பெண் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டலா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கூலி வேலைக்காக ஜபல்பூர் வந்துள்ளார். அங்கு பணியாற்றி வந்தபோது, மற்றொரு பெண் கூலித் தொழிலாளியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அப்பெண் தொழிலாளியின் குழந்தையைக் கடத்தித் தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில், கடத்தலில் ஈடுபட்ட பெண் தன் முகத்தை மூடியபடி, குழந்தையை கையில் ஏந்தியவாறு வேகமாக ஓடுவது பதிவாகியுள்ளது. குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இதில் அப்பெண் குழந்தையைத் தனது சொந்த ஊரான மண்டலாவுக்கு இரயில் மூலம் கடத்திச் செல்லத் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், ஜபல்பூர் இரயில் நிலையத்தைச் சென்றடைந்து, அப்பெண் நகரை விட்டு வெளியேறும் முன்பே அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும், அக் குழந்தையைக் காயம் ஏதுமின்றி பாதுகாப்பாக மீட்டனர். காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதாக ஜபல்பூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் எம்.டி. நகோதியா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
