LATEST NEWS
“எனக்கு என்ன தெரியும்னு கேக்குறீங்களா..? விமர்சனங்களுக்குச் செயலால் பதிலடி..! நெட்டிசன்களுக்கு நோஸ்-கட் கொடுத்த லயோலா மணி..!!”
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் லயோலா மணியை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக முதலமைச்சர் விஜய் சமீபத்தில் நியமித்தார். ஊடக விவாதங்கள் மூலம் பிரபலமான இவரது இந்த நியமனத்திற்கு, இணையவாசிகள் பலர் தகுதி என்ன என்று கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த விமர்சனங்களுக்குத் தனது அதிரடி கள ஆய்வுகள் மூலம் லயோலா மணி பதிலடி கொடுத்து வருகிறார். சென்னை அடையாறில் உள்ள பாடநூல் கிடங்கை நேரில் பார்வையிட்ட அவர், எதிர்காலத் தலைமுறையினரான மாணவர்கள் படிக்கும் புத்தகங்கள் சேமிக்கப்படும் இடம் மிகவும் மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வருவதைக் கண்டு வேதனை அடைந்தார். இந்த அவல நிலை முந்தைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்று என்று கூறி, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“லயோலா மணிக்கு என்ன தெரியும்?” என்று விமர்சித்தவர்களுக்குப் பதிலளித்துள்ள அவர், முந்தைய ஆட்சியாளர்களின் இத்தகைய தவறுகளையும் அவலங்களையும் மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டத் தெரியும் என்று கூறியுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய்யின் ஆலோசனையின்படியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகனின் முன்னிலையிலும் இந்த கிடங்குகள் மிக விரைவில் சீரமைக்கப்படும் என்றும், பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றத்தைக் கொண்டு வருவதே தங்களின் முதல் இலக்கு என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
