LATEST NEWS
போகிறவர்கள் ஜூலை 21க்குள் ஓடிவிடுங்கள்..! மம்தா பானர்ஜி விடுத்த அதிரடி கெடு..! தியாகிகள் தினத்தில் எடுக்கப்போகும் புதிய அவதாரம் என்ன..?!
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கட்சியின் ஒட்டுமொத்த 80 எம்.எல்.ஏ-க்களில் 50-க்கும் மேற்பட்டோர் மம்தாவுக்கு எதிராகத் தனி அணியாகப் பிரிந்துள்ளனர். அவர்களுக்கு பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற சபாநாயகர் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் வழங்கியுள்ளார். இதுமட்டுமின்றி, 20-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற எம்.பி-க்களும், மம்தாவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்த முக்கிய தலைவர்களும் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகி வருவது மம்தா பானர்ஜிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் ஃபேஸ்புக் லைவ் மூலம் தொண்டர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, விலகிச் செல்பவர்களுக்கு அதிரடியாகக் கெடு விதித்துள்ளார். பாஜக, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளின் அழுத்தம் காரணமாகவோ அல்லது வழக்குகள் காரணமாகவோ யாராவது கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், அவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்று கூறியுள்ளார். மேலும், “நாம் கட்டியெழுப்பிய கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம்; கைகூப்பி வேண்டுகிறேன், போகிறவர்கள் ஜூலை 21-ஆம் தேதிக்குள் போய்விடுங்கள்” என்று கெடு விதித்த அவர், இதனால் கட்சி பலவீனமடையாது என்றும், ஜூலை 21-க்குப் பிறகு ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி-யுமான கோயல் மல்லிக் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துவிட்டு, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவைச் சந்தித்துப் பேசியுள்ளார். கோயல் மல்லிக்கின் இந்த முடிவுக்கு மம்தா நன்றி தெரிவித்துள்ளார். 1993-ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று இடதுசாரி அரசுக்கு எதிராக மம்தா நடத்திய போராட்டத்தின் போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸைத் தொடங்க அடித்தளமாக அமைந்த இந்த ‘தியாகிகள் தின’ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஜூலை 21-க்கு முன்பாகவே துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என்பதில் மம்தா உறுதியாக உள்ளார்.
