LATEST NEWS
“இப்படி ஒரு தேசபக்தியா..!” தூசியால் மூடிய ரயில் எஞ்சினில் தேசியக் கொடியை பாட்டிலில் நீர் ஊற்றிச் சுத்தம் செய்த ஊழியர்… இணையத்தில் குவியும் பாராட்டு..!!
ரயில் பாதைகளில் தொடர்ச்சியாக இயங்கும் ரயில் எஞ்சின்கள் நீண்ட தூரப் பயணத்தின் போது தூசி மற்றும் அழுக்கால் நிறைவது இயல்பான ஒன்று. இருப்பினும், தூசியால் மூடப்பட்டிருந்த ரயில் எஞ்சினின் முன்பகுதியில் வரையப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை ஒரு ரயில்வே ஊழியர் பொறுப்புடன் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களின் இதயங்களை வென்று வருகிறது. இந்திய ரயில்வேயின் தலைமைத் திட்ட மேலாளரான ஆனந்த் ரூபனகுடி என்பவர் இந்த வீடியோவை தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ரயில்வே ஊழியர் ஒருவர் எஞ்சினின் முன் நின்று கொண்டிருக்கிறார். எஞ்சினின் பிற பகுதிகள் தூசியால் மூடியிருக்கும் நிலையில், அவருடைய கவனம் முன்புறம் உள்ள மூவர்ணக் கொடியின் மீது மட்டுமே உள்ளது. அவர் முதலில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நீர் ஊற்றி, பின்னர் ஒரு துணியைப் பயன்படுத்தி தேசியக் கொடியை மெதுவாகத் துடைத்துச் சுத்தம் செய்கிறார். காவி, வெள்ளை, பச்சை நிறப் பட்டைகளும் நடுவில் உள்ள அசோக சக்கரமும் தெளிவாகத் தெரியும் வரை அவர் அதை மிகக் கவனமாகச் சுத்தம் செய்கிறார். ரயில்கள் பணியின் போது அழுக்காவது இயல்புதான் என்றாலும், தேசியக் கொடியைத் தூய்மையாக வைப்பது அவசியம் என்று ஆனந்த் ரூபனகுடி அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த ரயில்வே ஊழியரின் செயலுக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தேசியக் கொடிக்கு அவர் காட்டிய இந்த மரியாதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், அவரது இந்தச் சிறிய முயற்சி கடமையுணர்வையும் நாட்டின் மீதான ஆழ்ந்த மரியாதையையும் வெளிப்படுத்துகிறது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
