LATEST NEWS
நீங்க என்ன உத்தமர்களா..? அந்த 5,000 கோடி ரூபாய் பணம் எங்கே போச்சு..? திமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் அமைச்சர் நிர்மல்குமாரின் அதிரடி அட்டாக்..!!
திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக விரைவில் சட்டப்பூர்வ வழக்கு தொடரப்படும் என்றும், இதுகுறித்த முறையான தகவலை முதலமைச்சரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தென்காசியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிதி விவகாரங்களை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளாக முன்வைத்துப் பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவை கடுமையாகச் சாடிய அவர், ஊழல் என்ற வார்த்தையைக் கேட்டாலே திமுகவினர் பதற்றமடைந்து விடுகிறார்கள் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, கடந்த ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட சுமார் 5,000 கோடி ரூபாய் பணம் எங்கே போனது? அதை என்ன செய்தீர்கள்? என்று அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பினார்.
மேலும், மதுரை மாநகராட்சியில் எந்தவொரு முறைகேடும் நடக்கவில்லையா? நீங்கள் ஊழலே செய்யாத உத்தமர்களா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் நிர்மல்குமார், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். இந்த ஊழல் புகார்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தனது பேட்டியில் உறுதியளித்தார்.
