LATEST NEWS
BREAKING: தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.. காலையிலேயே விஜய் தலையில் விழுந்த இடி..!!
தமிழக வெற்றிக் கழகத்தில் பல ஆண்டுகளாக உழைத்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரமும் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்சியில் தங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கப்படாமல், புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறி சென்னை புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக, தவெகவின் 186-வது வட்ட இணைச் செயலாளர் சந்தோஷ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக மூத்த தலைவர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதற்கு முன்னதாக, களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஒருவரும் அதிருப்தி காரணமாக அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தவெகவில் இருந்து விலகி மாற்றுத் திராவிடக் கட்சிகளில் இணையும் இந்த நிர்வாகிகள் அனைவரும் வார்டு மற்றும் வட்ட அளவிலான சிறிய பொறுப்புகளில் இருப்பவர்கள் என்றாலும், இவர்களின் இடமாற்றம் அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே அடிமட்டத் தொண்டர்களையும் வார்டு நிலை நிர்வாகிகளையும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது பக்கம் ஈர்த்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அடிமட்ட அளவில் தவெகவின் வாக்கு வங்கியையும் கட்டமைப்பையும் பலவீனப்படுத்த திராவிடக் கட்சிகள் திட்டமிட்டுச் செயல்படுவதாக இந்த நகர்வுகள் மூலம் அறிய முடிகிறது.
