CINEMA
இவங்கள பிரிக்கவே முடியாது…!தமிழ் சினிமாவின் ‘பாசக்கார’ இயக்குநர்கள்…!சீனியர் இயக்குநர்கள் அடித்த கமெண்ட்.. வாய்விட்டு சிரித்த பா.இரஞ்சித்: சோஷியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டிங்!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பா. இரஞ்சித். இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக, அடுத்ததாக கார்த்தியை வைத்து அவர் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டு படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ என அடுத்தடுத்து இரு படங்களை இயக்கும் அரிய வாய்ப்பைப் பெற்று, கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலிலும் இணைந்தார்.
‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வரை பா. இரஞ்சித்தின் திரைப்பயணம் எந்தவித சறுக்கலும் இல்லாமல் ஏறுமுகமாகவே இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைச் சந்தித்ததுடன், கடுமையான ட்ரோல்களுக்கும் உள்ளானது. அதனைத் தொடர்ந்து, சியான் விக்ரமுடன் இணைந்த ‘தங்கலான்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. விக்ரமின் அசாத்திய உழைப்பும் இரஞ்சித்தின் அரசியல் பேசும் கதையும் இணையும் போது படம் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் மேக்கிங் ரசிகர்களிடமிருந்து சற்று அந்நியப்பட்டு நின்றதால், படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த மேக்கிங் குறைபாட்டைப் பின்நாட்களில் இயக்குநரே ஒப்புக்கொண்டார்.
தற்போது இந்தத் தோல்விகளில் இருந்து மீண்டு வர பா. இரஞ்சித் தனது அடுத்தடுத்த புராஜெக்ட்களில் தீவிரம் காட்டி வருகிறார். தனது முதல் பட நாயகன் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசனை வைத்து ‘வேட்டுவம்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். படப்பிடிப்பின் போது சில விபத்துகள் மற்றும் தடங்கல்களைச் சந்தித்த போதிலும், தற்போது இதன் முழுப் பணிகளும் நிறைவடைந்து ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஆர்யாவை வைத்து அவரது திரைப்பயணத்தின் மைல்கல்லான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார். இந்த இரண்டு படங்களும் அவரது சினிமா கரியரில் மீண்டும் ஒரு வலுவான கம்பேக் ஆக அமையும் என்று ரசிகர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
இத்தகைய சூழலில், இயக்குநர் பா. இரஞ்சித் தொடர்பான நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. பிரபல இயக்குநர்களான அமீர், சமுத்திரக்கனி, மிஷ்கின் மற்றும் பா. இரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் வீடியோ அது. அதில் சீனியர் இயக்குநர்களுக்கு நடுவில் இரஞ்சித் அமர்ந்திருக்க, அவர்கள் தங்களுக்குள் ஜாலியாக கமெண்ட் அடித்து வாய்விட்டுச் சிரித்துப் பேசுகின்றனர். இவர்களின் இந்த அழகிய பிணைப்பைப் பார்த்த நெட்டிசன்கள், ‘மாயாண்டி குடும்பத்தார்’ பட பாசமே இவர்களிடம் தோற்றுவிடும் போல என்று கமெண்ட் செய்து, இந்த நட்பு என்றென்றும் நீடிக்க வேண்டும் என தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
