LATEST NEWS
தவெகவில் இணையும் ஊழல் புள்ளிகள்… குட்கா ஊழல் கறையை வெளுக்குமா தவெகவின் ‘சலவை இயந்திரம்’..? விஜய்க்கு சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி எச்சரிக்கை..!!
தமிழகத்தில் புதிய அரசின் ஊழல் எதிர்ப்பு முடிவுகளுக்குத் தொடக்கத்தில் ஆதரவு தெரிவித்த முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ், தற்போது தவெகவின் சில அரசியல் சேர்க்கைகள் குறித்துத் தனது கவலையைப் பதிவு செய்துள்ளார். பல்லாயிரம் கோடி ரூபாய் குட்கா முறைகேடு, சிபிஐ விசாரணை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளை எதிர்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போன்ற மாற்றுக்கட்சித் தலைவர்களைத் தவெகவில் இணைப்பது, மக்களிடையே அம்மாட்சி உருவாக்கியுள்ள நம்பிக்கையைச் சீர்குலைத்து விடும் என்று சமூக ஆர்வலர்களும் நேர்மையான அதிகாரிகளும் எச்சரிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர்களின் இந்த அதிரடித் தவெக சேர்க்கையைக் கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சியான திமுக, “வட இந்தியாவில் பாஜக பயன்படுத்தும் ‘வாஷிங் மெஷின்’ அரசியல் கலாச்சாரம் தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது போல தெரிகிறது” எனக் கிண்டல் செய்துள்ளது. குட்கா ஊழல் கறைகளைத் தவெகவின் புதிய ‘சலவை இயந்திரம்’ வெளுத்து விடுமா என்று திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பி வரும் வேளையில், இத்தகைய நகர்வுகள் தவெகவின் அரசியல் தூய்மைக்கு முரணானது என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது.
இந்த அரசியல் மாற்றங்கள் குறித்துத் தவெகவின் கூட்டணிக் கட்சிகளும், ‘அறப்போர் இயக்கம்’ போன்ற முன்னணி ஊழல் எதிர்ப்பு அமைப்புகளும் தங்களது பகிரங்க அதிருப்தியைப் பதிவு செய்துள்ளன. மாற்று அரசியலை முன்னெடுப்பதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த விஜய், தேர்தல் வெற்றிக்காகவும் இடங்களைக் கைப்பற்றுவதற்காகவும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தலைவர்களைச் சேர்ப்பது, கட்சியின் கொள்கைப் பிம்பத்தைச் சிதைத்துவிடும் என்று பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி ஊழலற்ற ஆட்சியை வழங்குவதே விஜய்யின் அரசியல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சகாயம் ஐ.ஏ.எஸ், இதுபோன்ற சேர்க்கைகள் கட்சியின் தூய்மைப் பிம்பத்தைப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர் விஜய், இத்தகைய விமர்சனங்களுக்கு இடையே தனது ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டை எவ்வாறு தக்கவைத்துக்கொள்ளப் போகிறார் என்பதே தற்போதைய பிரதான விவாதமாக மாறியுள்ளது.
