LATEST NEWS
“நாங்க எதுக்கும் பொறுப்பில்லை… ரூ.1 லட்சம் லேப்டாப்பை தூக்கிட்டு ஓடிய ரைடர்…” அட்ரஸைக் கூட தராம கையை விரிச்ச ஆப் நிறுவனம்… டெல்லியில் கதறும் வாடிக்கையாளர்..! பகீர் பின்னணி..!!
காசியாபாத்தைச் சேர்ந்த பங்கஜ் தாக்கூர் என்பவர், ஆகஸ்ட் 17 அன்று டெல்லி நேரு பிளேஸில் உள்ள ஒரு டேட்டா ரிக்கவரி கடையில் இருந்து தனது லேப்டாப்பை வீட்டிற்கு எடுத்து வருவதற்காக ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தினார். கடையில் இருந்து லேப்டாப்பைப் பெற்றுக்கொண்ட டெலிவரி ரைடர், அதை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்காமல் வழியிலேயே மாயமானார். சுமார் 4 மணி நேரம் காத்திருந்தும் லேப்டாப் வந்து சேராததால், பங்கஜ் டெலிவரி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டார். ரைடரைக் கண்டுபிடிக்க 2 நாட்கள் அவகாசம் தேவை என நிறுவனம் கூறியது. ஆனால் 2 நாட்கள் கழிந்த பிறகும் நிறுவனத்திடமிருந்து எந்தவித திருப்திகரமான தகவலும் கிடைக்கவில்லை.
லேப்டாப் கிடைக்காததைத் தொடர்ந்து, பங்கஜ் அந்தப் பொருளின் மதிப்பிற்கு ஈடான இழப்பீட்டை வழங்குமாறு நிறுவனத்திடம் கோரினார். ஆனால் நிறுவனத்தின் கொள்கைகளின்படி ரைடர் மாயமானால் அதற்கு நிறுவனம் எந்தப் பொறுப்பும் ஏற்காது எனக்கூறி இழப்பீடு வழங்க மறுத்துவிட்டது. மேலும் ரைடரின் முகவரி அல்லது விவரங்களைக் கேட்கும்போதும் அதை வழங்க நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பங்கஜ் டெல்லியில் உள்ள கல்காஜி காவல் நிலையத்தில் இ-எஃப்.ஐ.ஆர் மூலம் புகார் அளித்தார். இருப்பினும், புகார் அளித்தும் இதுவரை லேப்டாப் திரும்பக் கிடைக்கவில்லை என்றும், காவல்துறையிடமிருந்தும் தெளிவான தகவல் எதுவும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் இயங்கி வரும் சூழலில், சில சிறிய நிறுவனங்கள் வாடிக்கையாளர் புகார்களை சரியாகக் கண்டுகொள்வதில்லை என்பதால் இத்தகைய பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. இதுபோன்ற சூழல்களில், டெலிவரி ரைடர் பொருளை எடுத்துக்கொண்டு மாயமானால், உடனடியாக ரைடரின் பெயர், மொபைல் எண், வாகன எண் மற்றும் பொருளின் விவரங்களுடன் காவல் நிலையத்தில் திருட்டு புகார் அளிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். நிறுவனம் இழப்பீடு வழங்க மறுத்தால் ‘இ-தாகில்’ போர்டல் மூலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். அதற்கு ஆன்லைன் கட்டணப் ரசீது, சாட்டிங் மற்றும் அழைப்பு விவரங்கள் ஆதாரமாகப் பயன்படும். அதேபோல, எந்தவொரு டெலிவரி சேவையையும் புக் செய்வதற்கு முன்பாக நிறுவனத்தின் விதிகள் மற்றும் கொள்கைகளை வாடிக்கையாளர்கள் தெளிவாகப் படித்துப் பார்ப்பது அவசியம்.
