LATEST NEWS
என்னது… நான் செத்துட்டேனா..? கருமாதி நடக்கும்போதே… உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த கணவன்..! ஔரையாவில் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தைச் சேர்ந்த அஜீத்மால் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த ஜூலை 18 அன்று அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்றை காவல் துறையினர் கண்டெடுத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின் சடலத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. ஜூலை 20 அன்று சையத்பூர் பகுதியைச் சேர்ந்த தசரத் என்பவர், இறந்து கிடந்தது தனது தம்பி கமல் சிங் என அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் உடலைக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க, ஜூலை 21 அன்று குடும்பத்தினர் மதச் சடங்குகளுடன் இறுதி ஊர்வலம் நடத்தி உடலை அடக்கம் செய்தனர்.
குடும்பத்தினர் கமல் சிங் இறந்துவிட்டதாகக் கருதி துக்கத்தில் இருந்த நிலையில், அவருடைய மனைவி சுனிதாவுக்கு மட்டும் அந்த சடலம் தனது கணவருடையது என்பதில் சந்தேகம் இருந்தது. கமல் சிங் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்று, பஞ்சாப், குவாலியர் போன்ற இடங்களில் கூலி வேலை மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார். அவரிடம் சொந்தமாக மொபைல் போன் இல்லாததால் அறிமுகமான நபரின் போனில் இருந்து அவ்வப்போது மனைவியுடன் பேசுவது வழக்கம். சுனிதா அந்த எண்ணிற்குத் தொடர்புகொண்டு பேசியபோது, மறுமுனையில் கமல் சிங் பேசியுள்ளார். தான் இறந்துவிட்டதாகக் கூறி குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்துவிட்டதை அறிந்த கமல் சிங், அதிர்ச்சியடைந்து உடனடியாக குவாலியரிலிருந்து தனது கிராமத்திற்குப் புறப்பட்டு வந்தார்.
வீட்டில் கமல் சிங்கிற்காக சாந்தி பூஜை நடந்து கொண்டிருந்த வேளையில், அவர் உயிருடன் வீட்டிற்குள் நுழைந்தார். இறந்துபோனதாக நினைத்த நபர் உயிருடன் நேரில் வந்ததைக் கண்டு குடும்பத்தினரும் கிராம மக்களும் கடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த அஜீத்மால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். கமல் சிங் உயிருடன் திரும்பிய நிலையில், அடக்கம் செய்யப்பட்ட அந்த அடையாளம் தெரியாத சடலம் யாருடையது என்றும், அடையாளங்காணலில் தவறு ஏற்பட்டது எப்படி என்றும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
