LATEST NEWS
“தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்”… ஒரே வீட்டில் மட்டும் 23 சடலங்கள்… 1,050 உயிர்களைப் பலிவாங்கிய நேபாள இமயமலைப் பேரழிவு.. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்..!!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொடூரப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,050 ஆக அதிரடியாக அதிகரித்துள்ளது. திபெத்தின் இமயமலைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு உண்டானது. பாறைகள், மண் மற்றும் சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை முற்றிலும் சிதைத்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக அங்கு ராணுவத்தினரின் உதவியுடன் மீட்புப்பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று காலை நுவாகோட்டின் பெத்ராபதி பகுதியில் சேற்றில் புதையுண்ட ஒரே ஒரு வீட்டில் இருந்து மட்டுமே 23 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள 11 நீர்மின் திட்டப் பகுதிகளில் பணியாற்றிய சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கங்களுக்குள் சிக்கியிருப்பதால், மண்ணைத் தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைத்து வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் பல மடங்கு உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தற்போது வரை 583 வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,000 பேர் மயமாகியுள்ளனர். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர நடவடிக்கைகளால் இதுவரை 163 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட மேலும் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்களைப் பற்றிய விபரங்கள் தெரியாததால், இந்தியாவிலிருந்து சிறப்பு தடயவியல் மற்றும் சுரங்கப்பாதை மீட்புக் குழுக்கள் காத்மாண்டுவிற்கு விரைந்துள்ளன.
