LATEST NEWS
“கூவ மறுத்த குயில்கள்… அடுத்த வாரமே வந்த பேரழிவு” – நேபாள வெள்ளத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் இயற்கை தந்த மரண எச்சரிக்கை..!!
நேபாளத்தில் சமீபத்தில் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்கை குயில்களின் வருகையின்மையும் அதன் அமைதியும் முன்கூட்டியே எச்சரித்ததாக நேபாள எழுத்தாளர் சோபியா எல்.பாண்டே தெரிவித்துள்ளார். இமயமலையின் மடியில் அமைந்துள்ள நேபாளத்தில், பருவநிலை மாற்றம் மற்றும் உமிழ்வு கட்டுப்பாட்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசந்த காலத்தின் வருகையை தவறாமல் அறிவிக்கும் குயில்கள், முதல் முறையாக நேபாளப் பள்ளத்தாக்கு பகுதிக்கு வரவில்லை. உலகளாவிய வெப்பநிலை உயர்வு மற்றும் பசுமை இடங்கள் வேகமாக குறைந்து வருவதன் காரணமாகவே குயில்கள் வரவில்லை என்றும், இயற்கையின் இந்த அமைதியே ரசுவா பகுதியில் எந்தவித எச்சரிக்கையுமின்றி திடீரென ஏற்பட்ட சீற்றமிக்க வெள்ளத்திற்கு முந்தைய அறிகுறியாக இருந்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பூமியின் வெப்பநிலை ஏற்கனவே 1.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதால், இத்தகைய பேரிடர்கள் உலக அழிவின் காட்சியைப் போல கொடிய பயங்கரத்துடன் வெளிப்படுகின்றன. எனவே, இனிவரும் காலங்களில் நாட்டின் வரவு செலவுத் திட்டங்களை உருவாக்கும் போதும், கல்வி முறையை மாற்றியமைக்கும் போதும் பருவநிலை விழிப்புணர்வையும் திட்டமிடலையும் அரசு அதில் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
