LATEST NEWS
“நான் இன்னைக்கு டயட்ல இருக்கேன்… உன்ன அப்புறம் வச்சுக்கிறேன்…! நாய்க்குட்டியை வாயில் கவ்வி தூக்கிய சிறுத்தை… அடுத்த நொடியே நடந்த எதிர்பாராத அதிசயம்..! இணையத்தை அதிர வைக்கும் வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று தெருநாய்களைத் துரத்தும் காட்சி அங்குள்ள ஒரு கோயில் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி இருந்ததாலும், வளர்ப்புப் பிராணிகளை அது வேட்டையாடி வந்ததாலும் பொதுமக்கள் ஏற்கனவே அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், நள்ளிரவில் வந்த சிறுத்தையைக் கண்டவுடன் பெரிய நாய்கள் அனைத்தும் தப்பி ஓடிவிட்டன. ஆனால், இரண்டு சிறிய நாய்க்குட்டிகள் மட்டும் அங்கிருந்து தப்ப முடியாமல் மாட்டிக்கொண்டன.
அப்போது அந்தச் சிறுத்தை வேகமாக வந்து ஒரு நாய்க்குட்டியைப் பிடித்துத் தன் பிடியில் வைத்துக்கொண்டது. சிறுத்தை அந்த நாய்க்குட்டியைக் கொன்றுவிடும் என்றே அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் அந்தப் பதற்றமான சூழல் அமைந்தது. ஆனால், எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், சிறுத்தை அந்த நாய்க்குட்டிக்கு எந்தக் காயமும் ஏற்படுத்தாமல் சில நொடிகளிலேயே அதை விடுவித்துவிட்டு அங்கிருந்து அமைதியாக வெளியேறியது. சிறுத்தையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நாய்க்குட்டியும் எவ்வித காயமுமின்றி அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்த அரிய நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, சிறுத்தையின் இரக்கம் மற்றும் விலங்குகளின் இயல்பு குறித்துப் பயனர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிறுத்தை கருணையுடன் நாய்க்குட்டியை விட்டுவிட்டதாகச் சிலர் கூறினாலும், காட்டுவிலங்குகளின் நடத்தை சூழல், பசி மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்பதால் அவற்றுக்கு மனித உணர்வுகளைக் கற்பிக்க முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ, கொடூரமான வேட்டை விலங்கிடமிருந்து அந்த நாய்க்குட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
