LATEST NEWS
“என் இனிய தமிழ் மக்களே” என்ற காந்த குரல் மவுனமானது…! திரை உலகின் முடிசூடா மன்னன்… இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு வைகோ இரங்கல்…!!
திரைப்பட உலகின் ஈடு இணையற்ற மாபெரும் படைப்பாளியான இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆழ்ந்த இரங்கலை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், தென் தமிழகக் கிராமங்களின் வாழ்வியலையும், வீரமிக்கத் தமிழர்களின் கலாச்சாரப் பெருமையையும் வெள்ளித்திரையில் உலகறியச் செய்த முடிசூடா வேந்தன் பாரதிராஜா எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், பாரதிராஜா திரையுலகில் ஏற்படுத்திய பிரம்மாண்டமான இடத்தை இனி எவராலும் எப்போதும் நிரப்ப முடியாது என்றும், ‘என் உயிரினும் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது காந்தக் குரல் ஒலியைத் திரைப்படங்களின் தொடக்கத்தில் கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் சிலிர்த்ததாக வைகோ தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
பாரதிராஜாவின் முத்திரை பதித்த படைப்புகளை நினைவு கூர்ந்த வைகோ, ’16 வயதினிலே’ திரைப்படம் வாலிப நெஞ்சங்களைக் காதலால் வருடி, படம் முடிந்து திரையரங்கை விட்டு வரும்போது கண்களில் கண்ணீருடனும் கனத்த இதயத்துடனும் வெளியேற வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘மண் வாசனை’ போன்ற கிராமத்துக் காவியங்களையும், ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் மர்மங்களையும், சிவாஜி கணேசனின் மறுஉயிர்ப்பான ‘முதல் மரியாதை’ மற்றும் பெண்ணுரிமை பேசிய ‘புதுமைப் பெண்’ போன்ற திரைப்படங்களையும் வைகோ பாராட்டியுள்ளார்.
காவிய நாயகனான பாரதிராஜா உடலால் மறைந்தாலும், அவரது காலத்தால் அழியாத கலைப் படைப்புகள் மூலம் அவர் மரணத்தை வென்று என்றென்றும் மக்கள் மனதில் வாழ்வார் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
