LATEST NEWS
லஞ்சம் வாங்கியவரின் மனைவிக்கு தவெகவில் பதவி… தமிழக அரசியலில் கிளம்பிய அடுத்த பரபரப்பு..!!
சாலை ஒப்பந்தக்காரரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி, தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியின் மனைவி ஹேமாவதிக்கு தவெக-வில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. கணவர் வீராசாமி வகித்து வந்த செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் பொறுப்பு தற்பொழுது அவரது மனைவி ஹேமாவதிக்கு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, வீராசாமி தனது அலுவலகத்தில் அமர்ந்து ஒரு ஒப்பந்தக்காரரிடம் ₹1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் வீராசாமி லஞ்சப் பணத்தைப் பெற்றுத் தனது மனைவியிடம் கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஊழல் புகாரில் சிக்கிய வீராசாமியைத் தவெக தலைமை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து, காவல்துறையினரால் அவர் கைதும் செய்யப்பட்டார். லஞ்சம் வாங்கிய வீடியோவில் மனைவியும் உடன் இருந்த நிலையில், தற்போது அவருக்கே கணவரின் மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
