CINEMA
நம்பி ஏமாந்த சோனா…!'”என் சுயசரிதை வந்தா பல பேரு வண்டவாளம் தண்டவாளத்துல ஏறும்…!” -சினிமா உலகை உலுக்கும் சோனாவின் ‘ஸ்மோக்’மிரட்டலாக களம் இறங்கிய இயக்குநர் சோனா…!
தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரபலமான ஒரு முகமாக வலம் வரும் நடிகை சோனா, தற்போது இயக்குநராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கியுள்ள ‘ஸ்மோக்’ (Smoke) என்ற இணையத் தொடர், அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொடரின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளில் தொடக்கம் முதலே பல்வேறு முட்டுக்கட்டைகளும் பிரச்சினைகளும் நீடித்து வருகின்றன. இதுகுறித்து சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், சோனா தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் தற்போதைய மனநிலையையும் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
சென்னையின் பரபரப்பான சூழலில் வளர்ந்த சோனா, மனிதர்களின் சுயநலத்தாலும் ஏமாற்றங்களாலும் விரக்தியடைந்து, தற்போது பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள ஆரோவில் பகுதியில் முற்றிலும் தனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். “என்னுடைய வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கூட இல்லை; மனிதர்களைப் பார்த்தாலே எனக்கு இப்போது பயமாக இருக்கிறது” என்று கூறும் அவர், தன் மீது குத்தப்பட்ட ‘கவர்ச்சி நடிகை’ என்ற முத்திரையை உடைக்க விரும்புகிறார். தற்போது 49 வயதாகும் தனக்கு இனிமேலும் கவர்ச்சியாக நடிக்க விருப்பமில்லை என்றும், அதனால்தான் தனக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட இயக்கத்தில் முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் சொந்த வாழ்க்கையின் அவமானங்கள், வெற்றிகள் மற்றும் தோல்விகளை மட்டுமே படமாக்க விரும்பிய சோனாவுக்கு, ஆரம்பத்தில் அவரது தாயார் தடையாக இருந்துள்ளார். “நான் உயிரோடு இருக்கும் வரை இந்தத் கதையைப் படமாக்காதே” என்று அம்மா கூறியதால் தள்ளிப்போடப்பட்ட இந்தத் திட்டம், அவரது மறைவுக்குப் பிறகே ‘ஸ்மோக்’ தொடராக உருவெடுத்துள்ளது. ஆனால், படப்பிடிப்புத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தினமும் பல சவால்களையும் நெருக்குதல்களையும் சந்தித்து வருவதாகவும், ஒரு நாள் படப்பிடிப்பை முடிப்பதற்குள் பெரும் போராட்டத்தையே சந்திக்க வேண்டியுள்ளது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.”என் சுயசரிதை வெளியானால் பலரின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும், அவர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று சிலர் பயப்படுகிறார்கள். அதனால்தான் இந்தத் தொடர் வெளியாகக் கூடாது என முட்டுக்கட்டைப் போடுகிறார்கள்.”
நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என அனைவரையும் நம்பி ஏமாந்ததாகக் கண்ணீருடன் கூறும் சோனா, இனிமேல் தான் அழுதுகொண்டே ஏமாந்துவிட்டதாகச் சொல்லப் போவதில்லை என்றும், புன்னகையோடு கடந்து போகப் போவதாகவும் உறுதியளித்துள்ளார். தன் வாழ்க்கைக் கதையை எடுக்க யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என்று முழங்கும் சோனாவின் இந்தத் துணிச்சலானப் பேச்சு, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
