CINEMA
விஜய் ஜெயிச்சதும் திடீர் பாசமா?…லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தின் பின்னணியை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பொதுமக்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் பல்துறை வல்லுநர்களை ஒன்றிணைத்து, உள்ளூர் அளவில் புதிய தலைவர்களை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் நோக்கம் என லதா ரஜினிகாந்த் வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, தேர்தலில் களம் கண்டு பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, லதா ரஜினிகாந்த் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
லதா ரஜினிகாந்தின் இந்தத் திடீர் சமூகப் பிரவேசத்தைக் கடுமையாக விமர்சித்து, பிரபல சினிமா விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். “இதுவரை உங்களது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் எத்தனை ஏழை மக்கள் இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்துள்ளனர்?” என்று ரஜினியின் குடும்பத்திற்குச் சொந்தமான மண்டபத்தின் வர்த்தகப் பயன்பாடு குறித்து அவர் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், லதா ரஜினிகாந்த் நிர்வாகிக்கும் கல்வி நிறுவனம் குறித்தும் விமர்சித்துள்ள மாறன், “நீங்கள் நடத்தி வரும் ஆஷ்ரம் பள்ளியில் ஏழை மாணவர்கள் அதிகமா அல்லது பணக்கார மாணவர்கள் அதிகமா? இப்போது விஜய் ஜெயித்ததும், மக்கள் மீது உங்களுக்கு திடீரெனப் பாசம் வந்தது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகளால் வறுத்தெடுத்துள்ளார். லதா ரஜினிகாந்தின் ‘மக்கள் மேடை’ இயக்கம் பாராட்டுக்களைப் பெற்று வரும் அதே வேளையில், ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனப் பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, விவாதப் பொருளாக மாறியுள்ளது.
