CRIME
மனைவியின் சேலையிலேயே நேர்ந்த விபரீதம்.. 2 குழந்தைகளுடன் தந்தை எடுத்த கொடூர முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆண்டிக்கரை பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வல்லரசு. இவருக்கும், இவரது மனைவி ஸ்ரீபிரியாவுக்கும் இடையே அண்மையில் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீபிரியா, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மேட்டூர் ராஜகணபதி நகரிலுள்ள தனது தாய் வீட்டிற்குத் தஞ்சமடைந்துள்ளார். நேற்று அங்கு சென்ற வல்லரசு, மனைவியைச் சமாதானம் செய்ய முயன்றபோது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வல்லரசு, தனது குழந்தைகளான 4 வயது மைவிழி, 2 வயது தர்ஷன் ஆகியோருடன் தனி அறையில் தூங்கச் சென்றுள்ளார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த ஸ்ரீபிரியா மற்றும் உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது வல்லரசு தனது இரு குழந்தைகளையும் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, தானும் மனைவியின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான காட்சி கண்டு அதிர்ச்சியடைந்து கதறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார், மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இக்கோர விபரீதம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
