LATEST NEWS
பைக்ல என்னப்பா இத்தனை ஹாரன்..? நெடுஞ்சாலையில் காதைக் கிழிக்கும் சத்தம்.. 1 இல்ல 2 இல்ல 100 ஹாரன் வச்ச விசித்திர பைக்கை மடக்கிய போலீஸ்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கன்வார் யாத்திரை தீவிரமாக நடைபெற்று வருவதையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்யப் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையின் போது, நெடுஞ்சாலையில் காதைக் கிழிக்கும் வகையிலான அதிபயங்கர சத்தத்துடன் வந்த விசித்திரமான பைக் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அந்த வாகனத்தில் இருந்து வெளிவந்த ஒலியின் வேகம் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளையே ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைத்தது.
போலீஸார் அந்த மோட்டார் சைக்கிளை அணைத்துவிட்டுப் பரிசோதித்த போது, அந்த வாகனம் முற்றிலும் சட்டவிரோதமாக உருமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பைக்கின் முன்பக்கத்திலும், பக்கவாட்டிலும் அடுக்கடுக்காகப் பார்ப்போரைக் மிரள வைக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட ஹாரன்கள் மற்றும் கூடுதல் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. யாத்திரைக்கு வரும் மற்ற பக்தர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையிலேயே அந்த இளைஞர் தனது பைக்கை இவ்வாறு மாற்றி உலா வந்துள்ளார்.
இதையடுத்து, பொதுமக்களுக்குக் கடுமையான ஒலி மாசு (Noise pollution) ஏற்படுத்தியது மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை அப்பட்டமாக மீறிய குற்றங்களுக்காகப் போலீஸார் அந்த விசித்திரமான பைக்கை உடனடியாகப் பறிமுதல் செய்தனர். மேலும், ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி வந்த அந்த நபருக்குக் கடுமையான அபராதம் விதித்த அதிகாரிகள், இனிமேல் இது போன்ற ஆபத்தான அத்துமீறல்களில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
