LATEST NEWS
“அரசியல் பின்புலம்… அள்ளிக் குவிக்கும் பணம்..!” நீட் மையங்களின் ரகசியத்தை உடைத்த தளி ராமச்சந்திரன்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் நீட் தேர்வுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சமூக நீதியின் ஆணிவேராகத் திகழும் தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு நீட் என்ற நுழைவுத்தேர்வை ஒரு நவீன தீண்டாமையாக நுழைத்து ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்துள்ளது என்று அவர் குற்றஞ்சாட்டினார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அரியலூர் மாணவி அனிதா உள்ளிட்ட அநேக மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலநிலை உருவானது என்று அவர் வேதனை தெரிவித்தார்.
நீட் தேர்வு முறையை மூலதனமாக வைத்து நாடு முழுவதும் தனியார் நீட் பயிற்சி மையங்கள் ஒரு மாபெரும் வியாபாரத்தை நடத்தி வருகின்றன. அரசியல் பின்புலம் வாய்ந்த ‘கல்வி மாபியாக்களால்’ இயக்கப்படும் இந்த மையங்கள் மூலமாக ஆண்டுதோறும் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டப்படுவதாக அவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். இவ்வளவு பெரிய தொகையைக் கட்டணமாகச் செலுத்த முடியாத கிராமப்புற மற்றும் அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கனவு தொடர்ந்து பறிக்கப்பட்டு, திறமை இருந்தும் பண வசதி இல்லாததால் அவர்கள் பின்தள்ளப்படுகிறார்கள். எனவே, எந்த உயர் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு கூடாது என்றும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வியாபார நோக்கிலும், பண பலம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவ இடங்களைப் பெறும் வகையிலும் செயல்படும் இந்த நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். வணிகமயமாக்கப்பட்டுள்ள இந்த முறையை முடிவுக்குக் கொண்டுவர, தமிழ்நாடு சட்டப்பேரவையில் உடனடியாகத் தனித் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், அரசுப் பள்ளி மற்றும் சாதாரணக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் திறமைக்கும் உழைப்பிற்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் மருத்துவச் சேர்க்கை அமைய வேண்டும் என்று கூறி தனது அதிரடியான உரையை அவர் நிறைவு செய்தார்.
