LATEST NEWS
அடப்பாவமே..! பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்… தேசியக் கொடி ஏற்றிய 16 வயது மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாப பலி..! கொதித்தெழுந்த உறவினர்கள் NH-44 சாலையில் போராட்டம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ததியா மாவட்டத்தில் உள்ள ‘லிட்டில் ஸ்டார் பப்ளிக் பள்ளி’யில் சுதந்திர தின தயாரிப்புகளின் போது, பள்ளிக் கூரையில் தேசியக் கொடியை ஏற்ற முயன்ற 16 வயது மாணவன் ராஜ் குஷ்வாஹா, மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். வெள்ளிக்கிழமை வகுப்புகள் முடிந்த பிறகு, மதியம் சுமார் 1:30 மணியளவில் பள்ளி நிர்வாகி அவனை மீண்டும் அழைத்து, உயர் அழுத்த மின்சார கம்பி செல்லும் கூரையின் மீது பலவந்தமாக தேசியக் கொடியை ஏற்ற அனுப்பியதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் காரணமாக சனிக்கிழமை அப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.
சம்பவம் நடந்த உடனே அதுகுறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த மாணவனின் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை-44 இல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற சமூக நீதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் நாராயண் சிங் குஷ்வாஹாவின் காரும் மறியலில் சிக்கியது. உடனே காரை விட்டு இறங்கிய அமைச்சர், மாணவனின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சம்பவ இடத்திலிருந்த துணைப் காவல் கண்காணிப்பாளரிடம் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் நாராயண் சிங் குஷ்வாஹா, குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொறுப்பானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார். இதற்கிடையில், கோத்வாலி காவல் நிலைய ஆய்வாளர் தினேஷ் ராஜ்புத் அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி, தப்பியோடிய பள்ளி உரிமையாளர் நந்தகிஷோர் குஷ்வாஹா மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 105 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.
